வாடிக்கையாளர் தொல்லை மையம்.
சங்ககாலத்தில் பாலை நிலத்தில் கொடிய மனம் கொண்டவர்களாக வழிச்செல்வோரிடம் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தியவர்களை ஆறலைக்கள்வர்கள் என்றழைத்தனர்.இத்தனை ஆண்டு காலம் சென்றபின்னும் இன்றும் ஆறலைக் கள்வர்களைப் பார்க்க முடிகிறது.



வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எதைத் திறந்தாலும் இவர்களைப் பற்றிய செய்திகளே முதலில் கண்ணில் படுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் வழிப்பறிக்கொள்ளை!!பட்டப்பகலில் நட்டநடுத் தெருவில் மக்கள் கூட்டம்கொட்ட கொட்ட விழித்திருக்க பெண்கள் கழுத்தில் இருந்து நகைகளைப் பறித்துச்செல்வோர் எண்ணிக்கை அதிகரி்த்துவருகிறது.யாரைக் குறை சொல்வது?வழிப்பறி செய்வோரையா?தங்கத்தின் மீது பெருமோகம் கொண்டிருக்கும் பெண்களையா?சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்த் துறையையா?



இது ஒருபக்கம் இருக்கட்டும்.சங்ககாலத்து ஆறலைக்கள்வர்கள் தம் அம்புகளைப் பாறையில் கூர் தீட்டிக்கொண்டிருப்பார்கள். அப்போது தம் அம்புகள் கூர்மையாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவ்வழிச்செல்லும் வம்பலரின் (வழிசெல்வோர்) மேல் எய்வார்களாம் அவர்கள் இறந்துவிட்டால் அம்பு கூர்மையாகிவிட்டது என்றும். அவர்கள் உயிருக்குப் போராடினால் இன்னும் கூர்தீட்டப்பட வேண்டும் என்றும் கருதுவார்களாம். இக்கள்வர்கள் தாம் வேட்டையாடும்போதும், வழிப்பறி செய்யும்போதும் துடி என்னும் தோற்கருவியை முழக்குவது வழக்கமாம்.


இன்றைய சூழலில் மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒவ்வொருவருமே ஆறலைக்கள்வர்களாகத்தான்எனக்குத் தோன்றுகிறார்கள்.இக்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவன் என்றமுறையில் என் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.வாடிக்கையாளர் சேவை என வழங்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுகின்றன என்பதை ஒரு வாடிக்கையாளர் தானே சொல்லவேண்டும்.


அந்த அடிப்படையில்..அலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளன் என்ற முறையில் அலைபேசி சேவைமையத்தாரின் தொல்லைகளை (சேவை)சொல்கிறேன். உங்கள் அனுபவத்துடன் ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் என தனியார் சேவை நிறுவனங்கள் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.டயல்டோன் காமெடிஜோக்ஸ் அழகுக்குறிப்பு கதை சொல்றோம் கிரிக்கெட்செய்திகள் பங்குவணிகம் என்று பல்வேறு ஆயுதங்களைச் சுமந்துகொண்டுவரும் இந்த சேவை மையத்தார் தொடர் அழைப்புகளால் வாடிக்கையாளர்களைப் பெரிதும் துன்புறுத்திவருகின்றனர் என்பதைப் பலரும் அனுபவித்திருப்பீர்கள்.“நாம் கேட்காமலேயே இவர்களாக நம் கணக்கில் இந்த சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.


பணத்தையும் உரிமையுடன் பிடித்துக்கொள்கிறார்கள். ஓரளவுக்கு தொழில்நுட்ப அறிவுடையவர்கள் அந்த சேவையைப் போராடி நிறுத்திவிடுகிறார்கள். ஏன் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரியாமலேயே திருதிருவென விழிக்கும் அப்பாவி மக்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.“இந்த சேவை மையத்தார், பலமுறை என் உடன்பாடு இல்லாமலேயே பல்வேறு சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பணத்தையும் பிடித்திருக்கிறார்கள். சேவை மையத்துக்குத் தொடர்புகொள்ளலாம் என்றால் அவர்களிடம் பேசுவதற்கும் இப்போதெல்லாம் பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.



நொந்துபோய் சிலநேரங்களில் சிம்கார்டை மாற்றிவிடுவேன்.இவ்வாறு கொதிப்படைந்த நாளில் ஒருநாள் ஒரு தனியார் அலைபேசி வாடிக்கையாளர் மையத்திடமிருந்து அழைப்பு வந்தது. அவர்களே வழிய வந்து மாட்டினார்கள். உங்களுக்கு மட்டுமான புதிய வாய்பளிக்க இருக்கிறோம் என்று ஆரம்பித்தார்கள். அவர்களைப் பேசவே விடாமல்...என் மனதில் இருந்த கோபங்களையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டேன்..இப்போதான் மனசு இலேசாக இருக்கிறது.(வாடிக்கையாளர்களின் வாயிலாகக் கொள்ளையடிக்கும் சேவைமையத்தார் இதுபோல அவர்களின் மனதின் வலிகளைக் கொட்டித்தீர்க்க அதை வாங்கிக்கட்டிக்கொள்ள ஒரு சேவையையும் அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்)மனம் உவந்து இரவலருக்கு 100 ரூபாய் போட்டால் நிறைவடையும் மனம்தெரியாமல் ஏமாந்து 10 ரூபாய் விட்டாலும் விழுந்து விழுந்து அழுகிறதே!!!இந்த ஆறலைக் கள்வர்களிடம் இருந்து இனிவரும் காலங்களில் எப்படித்தான் தப்பிக்கப் போகிறோமோ..?


நன்றி. ரிலாக்ஸ் இடுகை